April 01, 2017

பழைய வாகனத்தை பி.எஸ்., - 4க்கு மாற்ற முடியுமா?

'மோட்டார் பைக் மற்றும் சில குறிப்பிட்ட பெட்ரோலில் இயங்கும் கார்களில், பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தில் இருந்து பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடியும் என்றாலும், அதை மாற்றுவதற்கு ஆகும் செலவில், புதிய வாகனத்தையே தயாரித்து விடலாம்' என, ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.


சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய காரணிகளில், வாகனங்கள் கக்கும் புகையே முக்கியமானதாக உள்ளது. இதை குறைக்கும் வகையில், பி.எஸ்., எனப்படும் பாரத் ஸ்டேஜ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, 'பி.எஸ்., - 4 தரமுள்ள இன்ஜின்களுடன் கூடிய வாகனங்களை மட்டுமே, 2017, ஏப்., 1 முதல் விற்க வேண்டும்; பதிவு செய்ய வேண்டும்' என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதை, 2016, டிசம்பரில் அளித்த தீர்ப்பிலும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்திருந்தது.இந்த நிலையில், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் மறுத்தது.

இந்த நிலையில், பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களை, பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, இத்துறை நிபுணர்கள் கூறியதாவது: இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும் என்பதில், மோட்டார் பைக்குகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம், வாகனங்களில் உள்ள புகை கக்கும் குழாய்களில் உள்ள வேறுபாடு தான். இதை மாற்றி அமைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. மேலும், அதிக செலவாகும். பி.எஸ்., - 4 இன்ஜினில், புகை வெளியேற்றுவது மற்றும் பெட்ரோல் டேங்க்குகளில் இருந்து பெட்ரோல் ஆவியாவதும் குறைக்கப்படுகிறது. மேலும், வாகனம் வெளியிடும் புகையை குறைப்பதற்காக, இன்ஜினில் உள்ள, 'கேடலிடிக் கன்வர்டர்' எனப்படும் வினையூக்கிக்கு, ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. இதனால், பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்தில், முந்தைய தொழில்நுட்பத்தைவிட, மாசு ஏற்படுவது வெகுவாக குறைகிறது. பி.எஸ்., - 3 வாகனத்தை, பி.எஸ்., - 4 வாகனமாக மாற்ற வேண்டுமானால், கிட்டத்தட்ட இன்ஜினை மாற்ற வேண்டும். மேலும், அந்த இன்ஜினுக்கு ஏற்ப, அதன் வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அதாவது, ஒரு புதியவாகனத்தை தயாரிப்பது போன்றதுதான். ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள ஒரு வாகனத்தை, பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாற்றுவது, மிகவும் கடினமாகும்.

அதனால் தான், மோட்டார் பைக் தயாரிப்பாளர்கள், தங்களிடம் உள்ள, பி.எஸ்., - 3 வாகனங்களுக்கு, கிட்டத்தட்ட, 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்தன. பெட்ரோலில் இயங்கும் கார் தயாரிப்பாளர்கள், ஏற்கனவே, பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டனர். அதேபோல் தான், மற்ற வாகனத் தயாரிப்பாளர்களும் ஏற்கனவே, பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தை நிறுத்திவிட்டு, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளனர். அவ்வாறு விற்காமல் உள்ள வாகனங்களில் கூட, சில குறிப்பிட்ட கார்களில், பி.எஸ்., - 3 தொழில்நுட்பத்தில் இருந்து, பி.எஸ்., - 4 தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், கனரக வாகனங்கள், வர்த்தக வாகனங்களை மாற்று வதற்கு வாய்ப்பே இல்லை.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்