February 21, 2017

மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்: தேதியை நிர்ணயிக்க உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை..


தமிழகத்தில் மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது. இருப்பினும், தேர்தல் தேதியை நிர்ணயிக்க செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அதுதொடர்பான அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.குமார், "மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்' எனத் தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ""உத்தேச தேதி தேவையில்லை. திட்டவட்டமான தேர்தல் நடத்தும் தேதியைக் கூற வேண்டும்'' என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்