February 13, 2018

பள்ளிகளின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் உறுதி.



''பள்ளிகளை நல்ல முறையில் நடத்துங்கள். அதில், எங்கள்
தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கிய, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆண்டின், 210 வேலை நாட்களிலும், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, பாராட்டு நற்சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.

பாராட்டு

தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில் நடந்த விழாவில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய, 51 ஆசிரியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:மாநிலத்தில் உள்ள, 45 ஆயிரத்து, 120 பள்ளிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 51 பேர் மட்டுமே, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், பணிக்கு வந்துள்ளனர்.

மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில், 37. 81 லட்சம்மாணவர்களில், 20 ஆயிரத்து, 739 மாணவர்கள் மட்டுமே விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு வந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை உயர, பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும். பள்ளிகளை ஆசிரியர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும்; அதில், எங்களின் தலையீடே இருக்காது; வெளிப்படைத் தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்த விழாவில், சால்வைக்கு பதிலாக புத்தகம் அளித்தனர். அதிலொரு புத்தகம், 'கண்டேன் புதையலை' என்ற தலைப்பில் இருந்தது. புதையலான கல்வியை மாணவர்களுக்கு தர, ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். அடுத்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. மாணவர்களுக்கு புதிய நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

பிளஸ் 2 படிக்கும், 70 ஆயிரத்து, 432 மாணவர்கள், போட்டி தேர்வு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, மார்ச், 20க்குள், இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும். அதில், போட்டி தேர்வு பயிற்சி பாடங்கள் இணைக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி, எட்டு கல்லுாரிகளில், தலா, 500 பேர் என, 4,000 பேருக்கு, உணவு, உறைவிடத்துடன், 25 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

சுழற்கேடயம்

கற்றல், கற்பித்தல்; பள்ளி இணை செயல்பாடுகள் மற்றும் பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதாக, மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம், 96 பள்ளிகளுக்கு சுழற்கேடயத்தையும், சான்றிதழையும், தலைமை ஆசிரியர்களிடம், செங்கோட்டையன் வழங்கி பாராட்டினார்.

விழாவில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் சிறப்புரையாற்றினார். தொடக்கக் கல்வி இயக்குனர், கருப்பசாமி வரவேற்றார். பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகநாதன், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், நந்தகுமார், இயக்குனர்கள், இளங்கோவன், கண்ணப்பன், இணை இயக்குனர்கள், பாஸ்கர சேதுபதி, ஸ்ரீதேவி, நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்