August 24, 2017

மாதச் சம்பளதாரர்கள் ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம் எடுப்பது எப்படி?

நம் நாட்டில் மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும், பி.எஃப் கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை இதுவரை படிவம் மூலமாக விண்ணப்பித்துப் பெற்றுவந்தோம். இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.



பி.எஃப் இதற்கு முன்...
உங்களுடைய பி.எஃப் பணத்தை நீங்கள் எடுக்க வேண்டுமெனில், நீங்கள் வேலைபார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியமாக இருந்தது. பி.எஃப் பணத்தை எடுக்கும்போது படிவம் எண் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்திசெய்து வேலைசெய்யும் நிறுவனத்திடம் தர வேண்டும். அதன் பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நிறுவனம் ஒப்புதல் அளித்த பிறகு, அந்தப் படிவம் பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். ஊழியர், பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அதனுடன் வங்கிக்கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைக்க வேண்டும். எல்லா வேலைகளும் முடிந்து இறுதியாக பி.எஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதுதான் இதுவரை பி.எஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையாக இருந்தது.
இதுமட்டுமின்றி நாம் பணிபுரியும் நிறுவனத்தில் ஏதோ ஒரு பிரச்னை காரணமாக அந்த நிறுவனத்தின் வேலையிலிருந்து விலகியவர்களுக்கு, பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறுவது என்பது பிரச்னையாகவும் சிக்கலாகவும் இருந்தது. இப்போது இந்த அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வேலைபார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எளிதாக ஆன்லைனில் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எடுக்கும் முன், உங்களுக்கு `யு.ஏ.என்' (Universal Account Number) எனச் சொல்லப்படும் யுனிவர்சல் கணக்கு எண் அவசியம். இந்த எண்ணை, நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். யு.ஏ.என் எண்ணைக் கேட்டு வாங்கிய பிறகு, இந்த எண்ணை பி.எஃப் வலைதளம் மூலம் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது நீங்கள் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் எந்தத் தொலைப்பேசி எண்ணை வழங்கினீர்களோ, அந்த எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அந்த எண்ணைப் பயன்படுத்தி யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம்!
யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்த பிறகு, பி.எஃப் வலைதளத்தில், உங்களுடைய பி.எஃப் கணக்கின் கே.ஒய்.சி ஆவணத்தில் ஆதார் விவரத்தை இணைத்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, பி.எஃப் சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என் எண்ணுடன், வங்கிக்கணக்கு, மொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால், பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பணம் எடுப்பதைப் பொறுத்தவரை மிக முக்கியமாக பி.எஃப் கணக்குடன் வங்கிக்கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் யு.ஏ.என் எண்ணை அவசியம் இணைத்திருக்க வேண்டும்.

அப்படி இணைத்திருந்தால் மட்டுமே, பி.எஃப் வலைதளத்தில் பணத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எடுக்க முடியும். விண்ணப்பித்ததும் உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்படும். பிறகே, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்குக்கு பி.எஃப் பணம் நேரடியாக அனுப்பப்படும். இப்போது ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வதன் மூலம், இதுவரை 20 நாள்களாக இருந்த எண்ணிக்கை குறைந்து பி.எஃப் பணம் உடனடியாக கைக்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்