July 29, 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

         
அரசு அலுவலர் சங்கங்கள் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து பேசினோம். அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், தொழில் வரி ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விரிவாக விவாதித்தோம்.

இடைக்கால நிவாரணம் குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்ற பிறகு, அந்த திட்டத்தை ரத்துசெய்வதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஆராயும் என்று உறுதி அளித்துள்ளார்.

மாநிலத்துக்கான 7-வது ஊதியக்குழு அறிக்கைகளைப் பெற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அதுபோன்ற அனைத்துவகை பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. விரைவில் இதற்கான அரசாணைகளையும் அவர் பிறப்பிப்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்