February 25, 2017

CPS :காலாவதியானது ஓய்வூதிய திட்ட கமிட்டி : 5 லட்சம் ஊழியர், ஆசிரியர்கள் தவிப்பு...

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான, தமிழக அரசின் நிபுணர் குழு காலாவதியாகி, இரண்டு மாதமாகிறது. அதனால், ஐந்து லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேள்விக்குறி ஆகியுள்ளது.


தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தினார். இதில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில், 10 சதவீதத்தை, ஓய்வூதிய திட்டத்திற்கு, அரசு பிடித்தம் செய்கிறது.இதற்கு சமமான தொகையை, அரசு தன் பங்காக செலுத்தும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, இந்த தொகையில், 60 சதவீதம் திருப்பி தரப்படும்.

மீதித்தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, 14 ஆண்டுகள் ஆன நிலையில், 90 சதவீதம் பேருக்கு, ஓய்வூதிய சலுகைகள் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, ஆசிரியர் அமைப்புகள், 2016ல் போராட்டம் நடத்தின.

நிலைமையை சமாளிக்க, 2016, பிப்., 26ல், பழைய ஓய்வூதிய திட்ட ஆய்வுக்கான நிபுணர் குழுவை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். குழு சார்பில், ஊழியர்கள், ஆசிரியர் களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனால், இதுவரை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், குழுவின் ஆயுள் காலம், 2016 டிச., 25ல் முடிந்து விட்டது. இரண்டு மாதமாகி விட்ட நிலையில், குழு தலைவர் சாந்தஷீலா நாயரும், சில வாரங்களுக்கு முன் விலகி விட்டார். அதனால், குழுவின் ஓராண்டு செயல்பாடுகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''பழைய ஓய்வூதிய திட்டம் தான், புதிய திட்டத்தால் பாதிக்கப்பட்ட, ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு. மீண்டும் புதிய குழு அமைப்பதற்கு பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்