January 28, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறைப்படுத்துக: வாசன் கோரிக்கை.


ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் உள்ள முறைகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் ஆசிரியர்களின் பணி
இன்றியமையாதது. மாணவர்களை நல்ல முறையில் உருவாக்குவதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியது. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் அவற்றை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் நிரப்ப வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்தவர்களின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. இருப்பினும் தற்போது ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இம்முறையில் மொத்தமுள்ள 100 சதவீதத்தில் தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீதமும், மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்ணை +2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணைச் சேர்த்தும் மதிப்பிட இருக்கிறார்கள். இம்முறையினால் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டப் படிப்புகளையும், ஆசிரியர் தகுதிக்கானப் படிப்புகளையும் முடித்துவிட்டு வேலையில்லாமல், பதிவு செய்து காத்திருப்போர்களே பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

தகுதித் தேர்வு முறையில் +2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணில் 40 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொண்டால், பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பை முடித்தவர்களுக்கும், தற்போதைய கல்வி முறையில் மதிப்பெண் பெறுபவர்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும்.
எனவே ஆசிரியர் தகுதிக்கான படிப்புகள் முடித்தவர்கள் அனைவரின் நலனில், ஒத்தக் கருத்தின் அடிப்படையில், ஏற்றத்தாழ்வற்ற நிலையை உருவாக்கும் விதமாக தற்போதுள்ள தகுதித் தேர்வு முறையில் உள்ள முறைகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எனவே ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும், தற்போது தனியார் கல்வி நிலையங்களில் அரசுப் பணியல்லாத பகுதி நேர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பாகுபாடு ஏற்படாத வகையில் அரசு ஆசிரியர் பணி வழங்கிட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்