தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும்' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வரும், 24 வரை, பெட்ரோல் பங்க், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்போரின் எண்ணிக்கை அதிகம். அதை கருத்தில் வைத்து, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தலைமையில், நாட்டில் உள்ள நான்கு பெரிய வங்கிகளின் அதிகாரிகள், நிதி மற்றும் உள்துறை அதிகாரிகள் அடங்கிய அதிரடிப் படையை, மத்திய அரசு அமைத்துள்ளது. அவர்கள், ஏ.டி.எம்.,களுக்கு, புதிய கரன்சிகள் விரைவாக சென்றடைவதை உறுதி செய்வர். மேலும், வங்கி ஏ.டி.எம்.,களில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள், இன்று முதல் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு தேவையான மாற்றங்கள், ஏ.டி.எம்., மையங்களில் நேற்று மாலை செய்யப்பட்டன.சென்னையில் சில ஏ.டி.எம்.,களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்; மாநிலத்தின் மற்ற பகுதிகளில், ஓரிரு நாளில் கிடைக்கும்.இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, 100 ரூபாய் மற்றும் புதிய, 500 ரூபாய் கரன்சிகள் உள்ள கன்டெய்னர்கள், நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளன. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கூறியதாவது:நேற்று காலை வரை, 100 ரூபாய்க்கு தட்டுப்பாடு இருந்தது. தற்போது, 100 ரூபாய் நோட்டுகள் வினியோகம் சீராகியுள்ளது. எனினும், 500 ரூபாய் நோட்டுகள் உள்ள பெட்டிகள், நேற்று மதியம் வரை பிரிக்கப்படவில்லை; அவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.அப்பணி நிறைவடைந்ததும், இன்று முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள வங்கிகளில் வினியோகிக்கப்படும். மற்ற பகுதிகளில், நாளை முதல் தாராளமாக கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதை, டில்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய அரசின் பொருளாதாரவிவகாரங்களுக்கான ஆலோசகர் சக்திகாந்த தாசும் உறுதி செய்தார். நீட்டிப்பு: அதே நேரத்தில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை, பெட்ரோல் பங்க்குகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயன்படுத்திக் கொள்ள, 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: பெட்ரோல் பங்க்குகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த, 14ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது; இது, 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களிலும் பழைய நோட்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். தொலைபேசி கட்டணம், வரிகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள, 24 வரை அனுமதி உண்டு. இருப்பினும், நடப்பு பில்களுக்கு மட்டுமே பழைய நோட்டுகளை பயன்படுத்த முடியும். இனி வரும் மாதங்களுக்கு செலுத்த வேண்டிய பில் தொகையை, முன்கூட்டியே செலுத்த அனுமதி இல்லை. இந்த வசதியை, தனிநபர் அல்லது வீடுகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.இவ்வாறு அரசு அதிகாரிகள் கூறினர். ரூ.2,000 வாங்குதில் தயக்கம்! புதிய,2,000 ரூபாய் நோட்டுகள் வினியோகம் துவங்கி விட்டாலும், 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வராததால், அதற்கு சில்லரை தர முடியாமல் வர்த்தக நிறுவனங்கள் தவிக்கின்றன. அதனால், 2,000 ரூபாயை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இன்னும் ஒருசில நாட்களில், நாடு முழுவதும், 500 ரூபாய் நோட்டுகள் தாராளமாக புழக்கத்திற்கு விடப்படும் என்பதால் இப்பிரச்னைக்கு முடிவு ஏற்படும். புரோக்கர்கள் உதயம் கறுப்பு பணத்தை கமிஷன் அடிப்படையில் மாற்றி கொடுப்பதற்கு, ஏராளமான புரோக்கர்கள் உலா வரும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள், 35 சதவீத கமிஷன் அடிப்படையில் கறுப்பு பணத்தை மாற்றி தருகின்றனர். அதாவது, ஒரு கோடி ரூபாய்க்கு, 35 லட்சம் ரூபாய் கமிஷன் பெறுகின்றனர்.
இவ்வாறு பணம் மாற்றி கொடுப்பவர்கள், குறைந்தபட்சம், 10 லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை மாற்றி கொடுக்கின்றனர். பெரும்பாலும் அரசியல்வாதிகள், கல்வி நிறுவன உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை குறிவைத்து பேரம் பேசுகின்றனர். இன்று முதல் வங்கிகளில் தனி 'கியூ' பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு, இன்று முதல், தனி வரிசைக்கு ஏற்பாடு செய்யும்படி, வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.எந்த வங்கியில் வேண்டுமானாலும், பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பெரும்பாலான வங்கிகளில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. வழக்கமான சேவைகளுக்காக வரும் வாடிக்கையாளர்கள், அந்த கூட்டத்தோடு நிற்பதால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால், இன்று முதல் வங்கிகளில், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கென தனி வரிசைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்